செய்திகள்

ராணுவ மந்திரியின் அருணாச்சல பிரதேச பயணத்துக்கு சீனா எதிர்ப்பு

Published On 2017-11-06 21:45 GMT   |   Update On 2017-11-06 21:45 GMT
ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்:

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இரண்டு நாள் பயணமாக அருணாசல பிரதேசத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். இந்தியா–சீனா எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அஞ்சா மாவட்டம் கபிது என்ற பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகளுக்கு சென்று, ராணுவ வீரர்களுடன் உரையாடினார். அவர்களது அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டினார்.

இதற்கிடையே, அருணாச்சல பிரதேசத்தை சீனா தெற்கு திபெத் எனக்கூறி உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் கருத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாத சீனா, தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்திற்கு முக்கிய தலைவர்கள் செல்லும் போது எதிர்ப்பு தெரிவிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

இந்நிலையில், ராணுவ துறை மந்திரி நிர்மலா சீதாராமனின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சான்யிங் கூறுகையில், சீனா - இந்தியா எல்லையில் கிழக்கு செக்டாரில் பிரச்சனை உள்ளது. பிரச்சனைக்குரிய இந்தப் பகுதிக்கு இந்திய தரப்பில் இருந்து பயணம் மேற்கொள்ளப்பட்டது அமைதிக்கு உகந்தது கிடையாது. எல்லையில் அமைதியை பராமரிக்க இந்தியாவும் சீனாவும் இணைந்து பணியாற்ற வேண்டும்
என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News