செய்திகள்

நிச்சயம் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்துவோம் - வடகொரிய எச்சரிக்கை

Published On 2017-10-26 18:57 GMT   |   Update On 2017-10-26 18:57 GMT
பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிச்சயம் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தப்படும் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
பியாங்யாங்:  

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா சக்திவாய்ந்த அணுகுண்டுகளை அவ்வப்போது சோதித்து வருகிறது. அமெரிக்காவின் அலாஸ்காலை குறிவைத்தே பெரும்பாலும் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் வடகொரியா மீது ஐநா பொருளாதார தடைவிதிக்கவும் ஆதரவு தெரிவித்தன.

அமெரிக்கா மிரட்டல் பொருளாதார தடையால் கோபமடைந்த வடகொரியா தனது அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவை தடம் தெரியாமல் அழித்து விடுவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அதற்கு வடகொரியா எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பதிலளித்தது.



மேலும் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை பசிபிக் பெருங்கடல் பகுதியில் நடத்தப்படும் என்று வடகொரிய வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார். வடகொரியா தலைவர்களின் பேச்சு உலக நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வடகொரியாவின் வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் நாங்கள் நிச்சயம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்துவோம். இது வெறும் வார்த்தையல்ல என உலக நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

வடகொரிய வெளியுவுத்துறை அமைச்சக அதிகாரியின் இந்த பேச்சு உலக நாடுகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வடகொரியாவின் நடவடிக்கையால் தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News