செய்திகள்

பாகிஸ்தான்: மூன்றாவது ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரிப் குற்றவாளியாக சேர்ப்பு

Published On 2017-10-20 08:39 GMT   |   Update On 2017-10-20 08:39 GMT
வருமானத்துக்கு அதிகமாக வெளிநாடுகளில் சொத்து குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், மூன்றாவது ஊழல் வழக்கில் இன்று குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி அவர் பதவியை விட்டு விலகினார்.

அவர்மீது விரிவான விசாரணை நடத்துமாறும், ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அவர் மீது இரு ஊழல் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நவாஸ் ஷெரிப் குடும்பத்துக்கு சொந்தமான ‘ஃபிளாக்‌ஷிப்’ நிதி நிறுவனம் தொடர்பான வெளிநாட்டு பணப் பரிமாற்றம் மற்றும் வருமானத்துக்கு அதிகமாக வெளிநாடுகளில் சொத்து குவித்தது தொடர்பாக நவாப் ஷெரிப் மீது தேசிய பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஹம்மது பஷிர் சம்மன் இன்று குற்றப்பத்திரிகை பதிவு செய்தார்.

நவாஸ் ஷெரிப் லண்டனில் உள்ளதால் அவரது வழக்கறிஞர் ஜாபிர் கான் குற்றப்பத்திரிகையின் நகலை பெற்று கொண்டார். ஒரே ஊழல் குற்றச்சாட்டுக்காக தனித்தனியாக மூன்று வழக்குகளை தொடர்ந்துள்ளது தனது கட்சிக்காரரின் (நவாஸ் ஷெரிப்) அடிப்படை உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளதாக ஜாபிர் கான் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News