செய்திகள்

வடகொரியாவின் 4 கப்பல்களுக்கு ஐ.நா. தடை - உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது

Published On 2017-10-11 01:10 GMT   |   Update On 2017-10-11 01:10 GMT
வடகொரியாவின் 4 கப்பல்களும் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று புதியதொரு தடையை விதித்தது.
நியூயார்க்:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பல்வேறு பொருளாதார தடைகளையும் மீறி தொடர்ந்து வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையையும் வெற்றிகரமாக நடத்தியது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. வடகொரியா மீது மிகக் கடுமையான தடைகளை விதிக்கவேண்டும் எனவும் வற்புறுத்தியது.

இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று வடகொரியா மீது புதியதொரு தடையை விதித்தது. அந்த நாட்டின் பெட்ரெல் 8, ஹாவோ பான் 6, டோங் சான் 2, ஜி சுன் ஆகிய 4 கப்பல்களும் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம் வடகொரியாவுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் சீனா மட்டும் அல்ல எந்த நாடும் தனது துறைமுகத்தில் இந்த 4 கப்பல்களையும் நிறுத்த அனுமதிக்க இயலாது.

இதுபோல் ஐ.நா.வின் விதிமுறை மீறியதற்காக குறிப்பிட்ட ஒரு நாட்டின் கப்பல்களை உலக நாடுகளின் துறைமுகங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஹூயூஜ் கிரிபித்ஸ் தெரிவித்தார். 
Tags:    

Similar News