செய்திகள்

தகுதி நீக்கத்தை எதிர்த்து முறையீடு: நவாஸ் ஷெரிப் மனு மீது 12-ம் தேதி விசாரணை

Published On 2017-09-09 09:34 GMT   |   Update On 2017-09-09 09:34 GMT
பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து நவாஸ் ஷெரிப் தாக்கல் செய்த மனுவின் மீது வரும் 12-ம் தேதி விசாரணை தொடங்குகிறது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி அவர் பதவியை விட்டு விலகினார். அவர்மீது விரிவான விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரிப் அந்த உத்தரவை எதிர்த்து மூன்று மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை வரும் 12-ம் தேதி நீதிபதி எஜாஸ் அப்சல் தலைமையிலான 3 நீதிபதி அமர்வின் முன் விசாரணைக்கு வரும் என பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் அலுவல் நடவடிக்கைக் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரீப்பை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டதும் இதே அமர்வுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News