செய்திகள்

பாரீஸில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு - வங்கியை தகர்க்க இருந்த திட்டம் முறியடிப்பு

Published On 2017-09-08 00:35 GMT   |   Update On 2017-09-08 00:35 GMT
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால், அங்கு பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே உள்ள வில்லிஜப் பகுதியில் உள்ள காலியான அடுக்குமாடி குடியிருப்பில் குண்டு வெடிப்பு நிகழ்த்துவதற்குத் தயாராக இருந்த சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

மேலும், குண்டு வெடிப்பில் பயன்படுத்தும் எரிவாயு உருளைகள், மின்கம்பிகள் உள்ளிட்டவையும் அந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டன. அந்த குடியிருப்பில் உள்ள பணியாளர் கொடுத்த தகவலின்பேரில் இரண்டுபேர் கைது செய்யப்பட்டனர். தீவிரவாத தடுப்பு போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட இடத்தில் வங்கிகளின் புளூ பிரிண்ட்கள் இருந்ததால், பாரீஸில் உள்ள வங்கியை தகர்க்க அவர்கள் முயன்றுள்ளதாக அந்நாட்டு உள்துறை மந்திரி ஜெரார்ட் கொல்லம்ப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
Tags:    

Similar News