செய்திகள்

பின்லாந்து கத்தி தாக்குதலில் 2 பேர் பலி: முக்கிய குற்றவாளியுடன் மேலும் 5 பேர் கைது

Published On 2017-08-19 16:04 GMT   |   Update On 2017-08-19 16:04 GMT
பின்லாந்தில் மார்க்கெட் சதுக்கத்தில் புகுந்த நபர், பொதுமக்களை கத்தியால் சரமாரியாக குத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
துர்கு:

பின்லாந்தின் துர்கு நகரில் உள்ள வணிக மையமான மார்க்கெட் சதுக்கத்தில், நேற்று மாலை வழக்கம்போல் பரபரப்பாக வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, அங்கு கத்தியுடன் வந்த ஒரு நபர், பொதுமக்களை நோக்கி வெறித்தனமாக தாக்கத் தொடங்கினார். இதனால், பொதுமக்கள் சிதறி ஓடினர். அந்த நபர் விரட்டி விரட்டி பொதுமக்களை குத்தியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி பிடித்தனர். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், நேற்று இரவு ஒரு குடியிருப்பு முழுவதையும் சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது சந்தேகத்தின்பேரில் 5 பேரை கைது செய்தனர்.

இதுபற்றி தேசிய புலனாய்வுக் குழுவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கத்தி தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளி மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டு கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியுடன் மற்ற 5 பேரும் தொடர்பில் இருந்துள்ளனர். எனவே, அவர்களும் இதேபோன்ற தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது’ என்றார்.
Tags:    

Similar News