செய்திகள்

பிலிப்பைன்சில் பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் இடையே மோதல் - 25 பேர் பலி

Published On 2017-08-14 23:55 GMT   |   Update On 2017-08-14 23:55 GMT
பிலிப்பைன்சில் உள்ளூரை சேர்ந்த பிரிவினைவாத இயக்கத்தினர் இடையே நிகழ்ந்த மோதலில் 20 பயங்கரவாதிகள் உள்பட 25 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்து உள்ளது.
மணிலா:

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானாவ் தீவில் சுமார் 2¼ கோடி மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ராணுவ சட்டம் அமலில் இருக்கும் சூழலில், இந்த தீவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐ.எஸ். இயக்கத்தினரின் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கம் ஒன்று இந்த தீவை வெளிநாட்டு பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக மாற்ற முயன்று வருகிறது.

எனவே இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்ளூரை சேர்ந்த மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி (மில்ப்) என்ற பிரிவினைவாத இயக்கத்தினர் போரிட்டு வருகின்றனர். இவர்களுக்கு பிலிப்பைன்ஸ் அரசும், ராணுவமும் ஆதரவு அளித்து வருகின்றன. இது தொடர்பாக அரசுக்கும், இந்த முன்னணியினருக்கும் இடையே ஒப்பந்தமும் போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மகுயின்டானாவ் பகுதியில் உள்ள 2 கிராமங்களில் கடந்த 7-ந் தேதி பயங்கரவாதிகள் நாட்டு வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தினர். இதில் மில்ப் போராளிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ராணுவத்தினரின் உதவியுடன் மில்ப் படையினர் பதிலடி கொடுத்ததால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

கடந்த 6 நாட்களாக நடந்த இந்த சண்டையில் 20 பயங்கரவாதிகள் உள்பட 25 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்து உள்ளது. 
Tags:    

Similar News