செய்திகள்

இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில் தற்கொலைப்படை தாக்குதல்: ஐ.எஸ் வேலையா? என விசாரணை

Published On 2017-06-24 00:23 GMT   |   Update On 2017-06-24 00:23 GMT
சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 11 யாத்ரீகர்கள் காயமடைந்தனர்.
ஜெட்டா:

சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரமானது இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. ரமலான் மாதம் என்பதால் தற்போது அங்கு லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். இந்நிலையில், நேற்று பிற்பகலில் அங்குள்ள மசூதியில் ஏராளமானோர் வழிபாடு நடத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது, மசூதிக்கு வெளியே கடும் பாதுகாப்பு வளையத்தையும் மீறி ஒரு தீவிரவாதி வெடிகுண்டுகளுடன் உள்ளே நுழைய முயற்சித்துள்ளான். அவனது நோக்கத்தை கண்டறிந்த போலீசார், சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, அவன் தன்னுடன் கொண்டு வந்த குண்டுகளை வெடிக்க வைத்தான். இதில், அங்கிருந்த ஒரு கட்டிடம் சரிந்து விழுந்தது. இதனால், 11 யாத்ரீகர்கள் காயமடைந்தனர்.

நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இந்த தாக்குதல் தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் மற்றொரு புனித நகரமான மதீனாவில் இதே போன்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலை ஐ.எஸ் அமைப்பினர் நிகழ்த்தினர். எனவே, இந்த தாக்குதலையும் அவர்கள் நடத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கூட்டுப்படையில் சவூதியும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News