செய்திகள்

லண்டன் மசூதி தாக்குதல்: குற்றவாளியின் அடையாளத்தை வெளியிட்ட போலீசார்

Published On 2017-06-19 20:58 GMT   |   Update On 2017-06-19 20:58 GMT
பிரிட்டன் தலைநகர் லண்டனில் மசூதி அருகே தொழுகை முடித்துவிட்டு வந்தவர்கள் மீது வாகனத்தை மோத விட்டு தாக்குதல் நடத்தியவரின் அடையாளத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
லண்டன்:

பிரிட்டன் தலைநகர் லண்டனில் மசூதி அருகே தொழுகை முடித்துவிட்டு வந்தவர்கள் மீது வாகனத்தை மோத விட்டு தாக்குதல் நடத்தியவரின் அடையாளத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டனின் வடக்கு லண்டனில் செவன் சிஸ்டர்ஸ் ரோடு உள்ளது. புனித ரமலான் மாதம் என்பதால் இங்குள்ள மசூதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் ’தராவீஹ்’ தொழுகை நடந்தது. தொழுகை முடிந்து ஏராளமானவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு வேன் தொழுகை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தவர்கள் நடந்து சென்ற பாதைக்குள் புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பலர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.



இந்த திடீர் தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து சென்று வேன் டிரைவரை மடக்கி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் கார்டிப் நகரைச் சேர்ந்த டெரன் ஆஸ்பர்ன் (45) என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு லண்டன் பாலத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர், இஸ்லாமியர்கள் மீதுள்ள வெறுப்பால் நிகழ்த்தப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக லண்டன் மேயர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News