செய்திகள்

சர்வதேச பார்வையாளர்களின் வாகனத்தை தாக்கியது இந்திய ராணுவம் - பாக். குற்றச்சாட்டு

Published On 2017-05-24 16:56 GMT   |   Update On 2017-05-24 16:56 GMT
எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே கண்காணிப்பு பணியில் இருந்த சர்வதேச பார்வையாளர்களின் வாகனத்தை இந்திய ரானுவம் தாக்கியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்லாமாபாத்:

காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவமானது பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து நேற்று தாக்குதல் நடத்தினர்.

இந்தியாவின் இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதற்கு ஆதாரமாக சில வீடியோ காட்சிகளையும் ராணுவம் வெளியிட்டது. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவம் இதை மறுத்து வந்தது. இந்நிலையில், எல்லைப்பகுதியில் நேற்று கண்காணிப்பு பணியிலிருந்த சர்வதேச ராணுவ பார்வையாளர்களின் வாகனத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த தாக்குதலில் அதிகாரிகளுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளது. எல்லைப்பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சர்வதேச ராணுவ பார்வையாளர்கள் உள்ளனர். சிம்லா ஒப்பந்தத்தின் படி இவர்கள் ஐ.நா.சபையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News