செய்திகள்

தென்கொரியா முன்னாள் அதிபர் பார்க் கியூன் மீதான ஊழல் விசாரணை தொடங்கியது

Published On 2017-05-23 06:14 GMT   |   Update On 2017-05-23 06:14 GMT
ஊழல் குற்றச்சாட்டால் பதவியை இழந்த தென்கொரியா முன்னாள் அதிபர் பார்க் கியூன் மீதான விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
சியோல்:

தென்கொரியாவில் அதிபர் பார்க் கியூனின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிக முக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

மேலும், அதிபருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தின.

அதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் தேதி சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார்.  மேலும்,  பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு மார்ச் 10-ம் தேதி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து நடைபெற்ற அதிபர் தேர்தலில்  லிபரல் கட்சியின் மூன் ஜே-இன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினார்.

ஊழல் குற்றச்சாட்டால் பதவியை இழந்த தென்கொரியா முன்னாள் அதிபர் பார்க் கியூன் மீதான விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெறுகிறது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணையை மேற்கொள்கின்றனர். 

முதற்கட்ட விசாரணை நீங்கள் என்ன குற்றம் செய்தீர்கள் என்று நீதிபதிகள் கேட்டதற்கு, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று பார்க் கியூன் கூறினார். தென் கொரிய ஊடகங்கள் இந்த விவகாரத்தை பரபரப்பாக வெளியிட்டு வருகிறது.
Tags:    

Similar News