செய்திகள்
பிஎஸ்என்எல் சேவைகளை இணையத்தில் இயக்க பிரத்தியேக சேவை அறிவிப்பு
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்க அந்நிறுவனம் புதிய இணையதள சேவையினை அறிமுகம் செய்துள்ளது.
கொல்கத்தா:
பிஎஸ்என்எல் சென்ட்ரலைஸ் வெப் செல்ஃப்கேர் போர்டல் (BSNL selfcare portal) என பெயரிடப்பட்டிருக்கும் புதிய சேவையின் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வசதிகளும் ஒரே தளத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்திருக்கும் புதிய தளத்திலேயே அனைத்து சேவைகளையும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் துவங்கியிருக்கும் BSNL selfcare portal தளம் சென்று வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் லேண்ட்லைன், பிராட்பேண்ட், ஜிஎஸ்எம் உள்ளிட்ட அனைத்து பிஎஸ்என்எல் சேவைகளின் வசதியை இயக்க முடியும். இங்கு பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் சேவைகளையும் இயக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய பிஎஸ்என்எல் சேவை முதற்கட்டமாக கிழக்கு மண்டலத்திற்குள் அடங்கும் பகுதியில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற இடங்களில் விரைவில் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் CWSC சேவையின் ஒற்றை கணக்கு மூலம் அனைத்து பிஎஸ்என்எல் சேவைகளையும் ஒரே தளத்தில் பயன்படுத்த முடியும்.
புதிய பிஎஸ்என்எல் சேவைகளை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களின் ஃபேஸ்புக், கூகுள்+ போன்ற சமூக வலைத்தள கணக்குகளையும் பயன்படுத்த முடியும். புதிய சேவைகளின் கீழ் வேகமான மற்றும் எளிமையான ஆன்லைன் கட்டண முறை வசதி, புதிய லேண்ட்லைன் மற்றும் பிராட்பேன்ட் சேவைகளுக்கு முன்பதிவு செய்தல், கூடுதல் லேண்ட்லைன் மற்றும் பிராட்பேன்ட் சேவைகளுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.
இத்துடன் பிஎஸ்என்எல் சேவைகள் சார்ந்த குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, அதன் நிலவரங்களை டிராக் செய்ய முடியும். மேலும் இன்வாய்ஸ், பில்லிங் மற்றும் அன்பில்டு பயன்பாடு உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வது, கட்டணங்களை செலுத்துவது மற்றும் ரீசார்ஜ் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ள முடியும். ஏற்கனவே இருக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களும், புதிய வாடிக்கையாளர்களும் தங்களின் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் CWSC கணக்கினை துவங்க முடியும்.