துறை அமைச்சர் ஸ்டாராக இருப்பதால்.. துறையும் ஸ்டாராக விளங்கி வருகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- ரொக்க பரிசுகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
- தேசிய அளவிலான கேலோ இந்திய விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெற உள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி 2023ல் வெற்றிப் பெற்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் ஆசிய போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.50 லட்சம், வெள்ளி பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.30 லட்சம், வெண்கலம் வென்ற வீரர்களுக்கு ரூ.20 லட்சம் என தமிழக வீரர்கள் 20 பேருக்கு ரூ.9.4 கோடி ரொக்க பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர், ரொக்க பரிசுகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆசிய விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்தமாக 107 பதக்கங்களை இந்தியா பெற்றது. இதில், தமிழக வீரர்கள் 17 பதக்கங்களை பெற்றுள்ளனர். தமிழக வீரர்கள் அதிக பதக்கங்களை குவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அதிக பதக்கம் வாங்கி கொடுத்த மாநிலத்தில் 5வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
அனைத்து துறையிலும் திராவிட மாடல் அரசு கவனம் செலுத்தி வருகிறது. சில துறைகள் ஸ்டார் துறைகளாக வளர்ந்து வருகிறது.
துறையின் அமைச்சர் ஒரு ஸ்டாராக இருப்பதால், துறையும் ஸ்டாராக விளங்கி வருகிறது.
உங்களை பார்த்து மேலும் பல வீரர்கள் வருவார்கள் என நம்புகிறேன்.
தேசிய அளவிலான கேலோ இந்திய விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.