தமிழ்நாடு

பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்றால்... ED-க்கு செசன்சு கோர்ட்டு கேள்வி

Published On 2024-01-08 07:10 GMT   |   Update On 2024-01-08 07:44 GMT
  • செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 3-வது முறையாக முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
  • அமலாக்கத்துறை தரப்பில் மூத்த வக்கீல் வருவதால் விசாரணையை சிறிது நேரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

சென்னை:

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12-ந்தேதி சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்தையினர் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து, ஐகோர்ட்டும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்தது, கீழ் கோர்ட்டை நாட செந்தில்பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டது.

இதன்படி, செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 3-வது முறையாக முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று மனு விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் மூத்த வக்கீல் வருவதால் விசாரணையை சிறிது நேரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது கோபமடைந்த நீதிபதி, ஏற்கனவே இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இதுவரை தாக்கல் செய்யவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் எதற்காக வழக்கு தொடருகிறீர்கள்? என்று அமலாக்கத்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பின்னர் வழக்கின் விசாரணை சிறிது நேரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.

Tags:    

Similar News