தமிழ்நாடு

சென்னை-புறநகர் பகுதியில் வெளுத்து வாங்கிய மழை: பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி

Published On 2023-09-21 04:25 GMT   |   Update On 2023-09-21 04:25 GMT
  • தற்போது காலாண்டு தேர்வு நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விட வாய்ப்பில்லை.
  • அரசு, தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி வகுப்புகளுக்கு சென்றனர்.

சென்னை:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு சில மாவட்டங்களில் பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் இரவில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் உஷ்ணத்தில் இருந்து தப்பித்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதியில் மழை பெய்தது. வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டதோடு ஒரு சில இடங்களில் கனமழையாகவும் பெய்தது.

இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் மழை விட்டு விட்டு பெய்ததால் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்தது.

ஆனால் காலை 7.30 மணி முதல் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வேன், பஸ்களில் புறப்பட்டு சென்ற நேரத்தில் மழை பெய்ததால் மிகவும் சிரமப்பட்டனர்.

தற்போது காலாண்டு தேர்வு நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விட வாய்ப்பில்லை. அரசு, தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி வகுப்புகளுக்கு சென்றனர்.

இதேபோல் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் கொட்டும் மழையிலும் நனைந்தபடி சென்றனர்.

எழும்பூர், கோயம்பேடு, அண்ணாநகர், அம்பத்தூர், மாதவரம், பெரம்பூர், மூலக்கடை, வடபழனி, மயிலாப்பூர், மடிப்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

புறநகர் பகுதியிலும் காலை முதல் மழை பெய்தது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு விழுப்புரம், கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் லேசான மழை பெய்தது.

இதற்கிடையில் இன்றும், நாளையும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News