மாநகர பஸ்களை நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும்: டிரைவர்-கண்டக்டர்களுக்கு உத்தரவு
- டிரைவர்-கண்டக்டர்கள் பஸ்களை உரிய பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.
- நிறுத்தத்தை விட்டு தூரம் சென்று நிறுத்தக் கூடாது.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் 28 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.
தற்போது பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதால் மாநகர பஸ்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு மாநகர பஸ் உதவியாக இருந்து வருகிறது. இலவசம் என்பதால் பெண்களை அவமதிக்க கூடாது, அவர்களிடம் கனிவாக நடந்து கொளள் வேண்டும் என டிரைவர்-கண்டர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் கை செய்கை மூலம் பஸ்சை நிறுத்த முயன்றால் நிறுத்தி ஏற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் ஊழியர்களுக்கு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் ஒருசில பஸ் டிரைவர்கள் பஸ்களை நிறுத்தத்தில் நிறுத்தாமல் சற்று தூரம் தள்ளி நிறுத்துவதாகவும் இதனால் பெண்கள், வயதானவர்கள் ஓடிச்சென்று ஏறுவதில் சிரமம் ஏற்படுவதாகவும் மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாமிற்கு புகார் வந்தது.
இதனை தொடர்ந்து அவர் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பினார். டிரைவர்-கண்டக்டர்கள் பஸ்களை உரிய பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். நிறுத்தத்தை விட்டு தூரம் சென்று நிறுத்தக் கூடாது.
பொதுமக்களிடம் இருந்து புகார் வராத வகையில் செயல்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை கிளை மேலாளர்கள் எடுக்க வேண்டும் என்று அன்பு ஆபிரகாம் அறிவுறுத்தி உள்ளார்.