தமிழ்நாடு

பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்

Published On 2022-09-22 06:56 GMT   |   Update On 2022-09-22 07:57 GMT
  • பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
  • பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில், தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியமான ரூ.1,000 தங்களின் குறைந்த பட்ச வாழ்வாதார தேவைகளுக்கு போதுமானதாக இல்லை.

சென்னை:

தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து கொண்ட பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட மருத்துவர்களின் வறுமை நிலையினைகளைய உதவும் வகையில் மாதம் ரூ.500 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது.

இது பின்னர் 60 வயதிற்கு மேற்பட்ட பதிவுபெற்றுள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர் இந்த ஓய்வூதியமானது டிசம்பர் 2011-ம் ஆண்டு ரூ.1000-ஆக உயர்த்தப்பட்டது.

தற்போது நிலவிவரும் பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில், தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியமான ரூ.1,000 தங்களின் குறைந்த பட்ச வாழ்வாதார தேவைகளுக்கு போதுமானதாக இல்லை எனவே தங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தினை ரூ.1,000 லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கிட பதிவு பெற்றுள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஓமியோபதி மருத்துவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன் அடிப்படையில், மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.1000 ஓய்வூதியம், நடப்பு ஆண்டு முதல் ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்கள் பயன்பெறும் வகையில் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.3 ஆயிரத்துக்கான ஆணைகளை பரம்பரை மருத்துவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News