தமிழ்நாடு

பொங்கல் பரிசு ரூ.1000 வங்கி கணக்கில் போட ஏற்பாடு

Published On 2022-11-29 04:58 GMT   |   Update On 2022-11-29 04:58 GMT
  • வருகிற பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு பதில் பணம் ரூ.1000 வழங்கி விடலாமா? என்று அரசு ஆலோசித்து வருகிறது.
  • வழக்கமாக வழங்கப்படும் பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கிவிட்டு ரூ.1000 பணத்தை வங்கி கணக்கில் செலுத்தலாமா? அல்லது ரேசன் கடைகளில் அதையும் கொடுக்க சொல்லலாமா? என்று ஆலோசனை நடந்து வருகிறது.

சென்னை:

பொங்கல் பரிசாக இந்த ஆண்டு 1000 ரூபாய் வழங்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்பட்டு வந்தது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் பணத்திற்கு பதில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை முழு கரும்புடன் வழங்கப்பட்டது.

இதில் உருண்டை வெல்லம் வழங்கியதில் பல இடங்களில் தரமான வெல்லம் வழங்கப்படாததால் புகார்கள் எழுந்தன. எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக விமர்சனம் செய்தன.

இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு பதில் பணம் ரூ.1000 வழங்கி விடலாமா? என்று அரசு ஆலோசித்து வருகிறது.

வழக்கமாக வழங்கப்படும் பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கிவிட்டு ரூ.1000 பணத்தை வங்கி கணக்கில் செலுத்தலாமா? அல்லது ரேசன் கடைகளில் அதையும் கொடுக்க சொல்லலாமா? என்று ஆலோசனை நடந்து வருகிறது.

ஏனென்றால் இந்த பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்க பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இதுவரை கொள்முதல் செய்ய தற்போது வரை டெண்டர் விடப்படவில்லை.

இதன் காரணமாக இந்த ஆண்டு பண்டிகைக்கு சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்க வாய்ப்பு இல்லை. ஆனாலும் வழக்கமாக வழங்கப்படக்கூடிய பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் பரிசுத்தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News