தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் டாஸ்மாக் பார்கள் 18-ந்தேதி ஏலம் விடப்படுகிறது

Published On 2022-08-05 09:20 GMT   |   Update On 2022-08-05 09:20 GMT
  • சென்னை உள்பட 8 மாவட்டங்களை தவிர்த்து 30 மாவட்டங்களில் டாஸ்மாக் ஏலம் நடத்தப்பட்டது.
  • மொத்தம் உள்ள 3,220 பார்களில், 20 சதவீதம் அளவுக்கே அப்போது ஏலம் விடப்பட்டது.

சென்னை:

தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் டாஸ்மாக் பார்கள் ஏலத்தில் விடப்பட்டன.

சென்னை உள்பட 8 மாவட்டங்களை தவிர்த்து 30 மாவட்டங்களில் டாஸ்மாக் ஏலம் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 3,220 பார்களில், 20 சதவீதம் அளவுக்கே அப்போது ஏலம் விடப்பட்டது.

முறைகேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மற்ற பார்களுக்கு ஏலம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் மீதம் உள்ள 3 ஆயிரம் டாஸ்மாக் பார்களுக்கு வருகிற 18-ந்தேதி ஏலம் நடைபெறுகிறது. சென்னை மாவட்டத்துக்குட்பட்ட டாஸ்மாக் பார்களின் ஏலமும் அன்றைய தினமே நடைபெறுகிறது.

இந்த நிலையில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் அன்பரசன், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் எழும்பூரில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரை சந்தித்து மனு அளித்தனர்.

அதில், 30 மாவட்டங்களில் 80 சதவீத பார்களின் ஏலம் உறுதி செய்யப்படாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், எனவே இனி நடைபெற உள்ள பார் ஏலத்தை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலர் அரசியல் தலையீட்டால் பார் டெண்டரில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக அறிகிறோம். அதனையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News