ஜனாதிபதி பிரிவு உபசார விழா- எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜனதா தலைமை அழைப்பு
- ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
- குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.
சென்னை:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் 24-ந் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி டெல்லியில் அவருக்கு நாளை பிரிவு உபசார விழா நடைபெறுகிறது.
டெல்லி அசோகா ஓட்டலில் நாளை இரவு நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் பா.ஜனதா மேலிடம் அழைப்பு அனுப்பி உள்ளது.
அதன்படி கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு அனுப்பி உள்ளனர்.
இந்த அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லி செல்லும் அவர் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதன் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.