தமிழ்நாடு

கனிமொழி - புதுக்கோட்டை விஜயா

தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மகளிர் அணியில் கடும் போட்டி

Published On 2022-09-21 06:46 GMT   |   Update On 2022-09-21 06:46 GMT
  • எல்லோரிடமும் அன்பாக பேசி, சகஜமாக பழகக்கூடிய திறமை கனிமொழி எம்.பி.யிடம் உள்ளதால் அவருக்கு இந்த பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
  • தி.மு.க.வின் உள்கட்சி தேர்தல் இப்போது நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் பொதுக்குழு கூட உள்ளது.

சென்னை:

தி.மு.க. துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சி நடவடிக்கையில் அதிருப்தி அடைந்து தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதியே தனது ராஜினாமா கடிதத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் அனுப்பி வைத்திருந்தார். ஆனால் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக தி.மு.க. தரப்பில் இருந்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், கட்சியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனால் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவி அடுத்து யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பதவி கட்சி தலைவரால் நியமிக்கப்படும் பதவி என்பதால் முதல்-அமைச்சர் யாரை நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த பதவியை பெற பல பேர் முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு துணை பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

எல்லோரிடமும் அன்பாக பேசி, சகஜமாக பழகக்கூடிய திறமை கனிமொழி எம்.பி.யிடம் உள்ளதால் அவருக்கு இந்த பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஆனால் கனிமொழி இந்த பதவியை ஏற்றுக்கொள்வாரா? என்பது தெரியவில்லை.

கனிமொழி எம்.பி. இந்த பதவியை ஏற்க மறுத்தால் புதுக்கோட்டை விஜயா பெயர் பரிசீலிக்கப்படலாம் என தெரிகிறது. மாநில கொள்கை பரப்பு செயலாளராகவும் தலைமை கழக பேச்சாளராகவும் உள்ள புதுக்கோட்டை விஜயா ஆரம்ப காலத்தில் இருந்து தி.மு.க.வில் உள்ளார். கட்சியிலும் மூத்த நிர்வாகியாக உள்ளார். எனவே இவருக்கு பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

தி.மு.க.வின் உள்கட்சி தேர்தல் இப்போது நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் பொதுக்குழு கூட உள்ளது. அந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அமைப்பு ரீதியாக நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அப்போது தி.மு.க. துணை பொதுச்செயலாளராக யாரை நியமிப்பார்கள் என்ற விவரம் வெளியிடப்படும்.

Tags:    

Similar News