கொரோனா அதிகரிப்பு- வகுப்பறைகளில் இடைவெளி விட்டு மாணவர்களை அமர வைக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
- 31-வது கொரோனா தடுப்பூசி முகாம் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது.
- தடுப்பூசி, முகக்கவசம் மட்டுமே கொரோனா தொற்று பரவலை தடுக்க சிறந்த வழிமுறை.
சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது என்றார். தொற்று பரவலை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
கொரோனா தொற்று அதிகரித்தாலும் 5% பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதனால் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவையில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 31-வது கொரோனா தடுப்பூசி முகாம் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெறவுள்ளதாகவும், பொதுமக்கள் இந்த முகாமை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவது மட்டுமே கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான சிறந்த வழிமுறை என்றும், கல்வி நிலையங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வகுப்பறைகளில் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளி விட்டு மாணவர்கள் அமர வைக்க சுகாதாரத் துறை சார்பில் கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.