திருச்சியில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு
- எதிர்பாராதவிதமாக விமானத்தின் இறக்கையில் பறவை ஒன்று மோதி சிக்கியது.
- விமானத்தின் இறக்கையில் அடிபட்ட பறவை அகற்றப்பட்ட பின்பு இன்று திருச்சி விமான நிலையத்திலிருந்து விமானம் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, பஹ்ரைன், சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12.10 மணிக்கு திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி ஏர் ஏசியா விமானம் புறப்பட்டு ஓடுதள பாதைக்கு சென்றது. அந்த விமானத்தில் 185 பயணிகள் இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானத்தின் இறக்கையில் பறவை ஒன்று மோதி சிக்கியது.
இதனால் மேலெழும்பி பறக்க தயாராக இருந்த விமானம் மீண்டும் வேகத்தை குறைத்து விமான நிலைய வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர்.
பின்னர் விமானத்தின் இறக்கையில் அடிபட்ட பறவை அகற்றப்பட்ட பின்பு இன்று நண்பகல் 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் பெரும் அவதியை சந்தித்தனர்.