செய்திகள்
வானிலையின் தற்போதைய நிலவரப் படம்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்'

Published On 2021-11-14 08:10 GMT   |   Update On 2021-11-14 08:40 GMT
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:

தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது, மத்திய அந்தமான் பகுதியில் நிலவுகிறது. இது நாளை மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என ஏற்கனவே கணிக்கப்பட்டது.

ஆனால், இது தாமதமாக வரும் 17-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் எதிரொலியால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்  கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும்,  கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் அம்மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளக்காடானது. தற்போது, மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதேபோல், நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News