செய்திகள்
சென்னையில் டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

40 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி சென்னையில் டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

Published On 2021-10-27 07:46 GMT   |   Update On 2021-10-27 07:46 GMT
40 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் தாமதமாக சென்றதால் கடைகள் 1 மணிநேரம் தாமதமாக திறக்கப்பட்டன.

சென்னை:

அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டது.

இந்த போனஸ் போதாது என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும் என்று இன்று சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் இந்த முற்றுகை போராட்டம் நடந்தது. அதன் தலைவர் கந்தசாமி, பொதுசெயலாளர் தனசேகரன் தலைமையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அலுவலகத்தின் வாசலில் நின்று கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

40 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை மனுவினை மேலாண்மை அதிகாரியிடம் வழங்கினார்கள்.

கொரோனா காலகட்டத்தில் மதுக்கடைகளை திறந்து தமிழக அரசின் நிதிநிலைமையை கருத்தில் கொண்டு பணியாற்றினோம். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்ற துறை பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்குவது போல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்காமல் 40 சதவீதம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால் ஒரு சில இடங்களில் இன்று 12 மணிக்கு மதுக்கடைகளை திறக்க முடியவில்லை. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் தாமதமாக சென்றதால் கடைகளும் 1 மணிநேரம் தாமதமாக திறக்கப்பட்டன. இதனால் ஒரு சில இடங்களில் மது பிரியர்கள் கடைகள் முன்பு காத்திருந்தனர்.

Tags:    

Similar News