செய்திகள்
காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
காதல் திருமணம் செய்து கொண்ட 6 மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரு.வி.க. நகர்:
சென்னை பெரம்பூர் நீலம் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 21). இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கீர்த்தனா (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கீர்த்தனா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களாக ராமச்சந்திரன் வேலைக்கு செல்லாமல் சமூக வலைத்தளத்தில் ஆர்வம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் விரக்தி அடைந்த கீர்த்தனா, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்துகுடித்து விட்டார். உடனடியாக அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தனா நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திரு.வி.க. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கீர்த்தனாவுக்கு திருமணமாகி 6 மாதமே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.