கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளி கழுத்து அறுத்து தற்கொலை
கோவை:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதேஸ்வரா நகரை சேர்ந்தவர் பெரியசாமி என்ற ஜெயசீலன் (வயது 63). சமீப காலமாக அவர் கோவை மதுக்கரையில் வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயசீலனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கொரோனா பாதிப்பால் வேதனை அடைந்த ஜெயசீலன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்றுமுன்தினம் இரவு தன்னுடன் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் தூங்கியதை அவர் உறுதி செய்து கொண்டார். பின்னர் ஆஸ்பத்திரி வார்டிலேயே அவர் தனது கழுத்து மற்றும் கைகளை கத்தியால் அறுத்துக் கொண்டார். இதில் ரத்தப்போக்கு அதிகமாகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
காலையில் ஜெயசீலன் பிணமாக கிடப்பதை பார்த்து மற்ற நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஜெயசீலன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
ஜெயசீலன் 2 பெண்களை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்களும் ஜெயசீலனை பிரிந்து சென்று விட்டார். இதனால் ஏற்கனவே மன வேதனையில் இருந்த ஜெயசீலன், தற்போது கொரோனா பாதிப்பாலும் அவதியுற்றார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் இந்த துயர முடிவை தேடிக் கொண்டது தெரியவந்தது.
ஜெயசீலனுக்கு முதல் மனைவி மூலம் 2 மகன்களும், 2-வது மனைவி மூலம் ஒரு மகளும் உள்ளனர்.