செய்திகள்
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொரோனாவுக்கு பலி
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயபிரகாஷ் திடீரென உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகித்தவர் ஜெயபிரகாஷ் (வயது 45). இவர், கடந்த வாரம் சேலத்தில் நடந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அப்போது, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், ஜெயபிரகாசுக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து உடனே அவர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயபிரகாஷ் திடீரென உயிரிழந்தார். அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருந்து வந்ததாகவும், சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.