செய்திகள்
ரதிதேவி- சுரேஷ்

ஆசைக்கு இணங்க மறுத்ததால் தலையில் கல்லை போட்டு பெண் கொலை- கள்ளக்காதலன் தற்கொலை

Published On 2021-02-19 19:28 GMT   |   Update On 2021-02-19 20:22 GMT
வத்தலக்குண்டு அருகே ஆசைக்கு இணங்க மறுத்த ஆத்திரத்தில் தலையில் கல்லை போட்டு பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன், தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). புகைப்பட கலைஞர். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

நிலக்கோட்டையை சேர்ந்த பொன்ராஜ் மனைவி ரதிதேவி (38). இவர் நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் புதுவாழ்வு திட்டத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்திற்கு புகைப்படம் எடுக்கச் சென்றபோது சுரேசுக்கும், ரதிதேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

அவர்களது கள்ளக்காதல் விஷயம், சுரேசின் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் அவர் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இருப்பினும் ரதிதேவியுடனான கள்ளக்காதலை சுரேஷ் விடவில்லை.

இந்தநிலையில் நேற்று சுரேஷ் தனது மோட்டார் சைக்கிளில் ரதிதேவியை வத்தலக்குண்டு அருகே வெறியப்பநாயக்கன்பட்டியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு சுரேஷ் தனது ஆசைக்கு இணங்குமாறு ரதிதேவியை வற்புறுத்தினார். ஆனால் அதற்கு ரதிதேவி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், அருகில் கிடந்த கல்லை எடுத்து ரதிதேவியின் தலையில் போட்டுவிட்டு தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டார்.

ரதிதேவி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள், வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரதிதேவியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதற்கிடையே கள்ளக்காதலியை கொன்றதால் எப்படியும் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணிய சுரேஷ், குரும்பபட்டி கண்மாய் பகுதியில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Tags:    

Similar News