செய்திகள்
அகல்யா

கந்தம்பாளையம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-10-31 12:42 GMT   |   Update On 2020-10-31 12:42 GMT
கந்தம்பாளையம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கந்தம்பாளையம்:

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே கோலாரம் ஊராட்சி கருக்கம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகள் அகல்யா (வயது 17). இவர் கரிச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 முடித்து உள்ளார்.

இந்தநிலையில் நேற்று முத்துசாமி லாரியில் பெங்களூரு சென்று விட்டார். தாய் சாந்தி உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சாந்தி மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் உள்பக்கம் தாழிட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

இதையடுத்து பின்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியின் கொக்கியில் நைலான் கயிற்றால் அகல்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அலறி துடித்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மாணவியின் உடல் கீழே இறக்கப்பட்டது. மாணவியின் உடலை பார்த்து தாய், உறவினர்கள் பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிகப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக மாணவியின் தந்தை முத்துசாமி, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பள்ளி மாணவி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News