நெல்லையில் இன்று குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி தற்கொலை
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது35), பெயிண்டர். இவரது மனைவி வடிவு (27). இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வடிவு கர்ப்பமானார். ஆனாலும் சில மாதங்களிலேயே அவரது கருகலைந்தது. இதேபோல் 3 முறை அவருக்கு கருகலைந்தது.
இதனால் கணவன்- மனைவி இருவரும் மனமுடைந்த நிலையில் இருந்தனர். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வடிவு மீண்டும் கர்ப்பமானார். ஏற்கனவே 3 முறை கரு சிதைந்ததால் இந்த முறை மிகவும் கவனமாக இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதனால் வடிவு மிக கவனமுடன் வீட்டிலேயே இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வடிவு வீட்டில் தவறி கீழே விழுந்ததால் அவருக்கு 4-வது முறையாக கரு கலைந்தது.
இது தொடர்பாக கணவன் -மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டனர். நேற்று இரவு இருவரும் வழக்கம் போல் தூங்க சென்றனர்.
இன்று காலை வெகு நேரமாகியும் அவரது வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து தச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது இருவரும் ஒரே அறையில் பிணமாக தொங்கினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி 2 பேரும் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தெரியவந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.