செய்திகள்
கொலை

தூத்துக்குடியில் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை- 6 பேர் கும்பல் வெறிச்செயல்

Published On 2020-09-14 07:25 GMT   |   Update On 2020-09-14 07:25 GMT
முன்விரோத தகராறில் தொழிலாளியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறாகள்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் கபில்தேவ் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவரது உறவினர் முத்தையாபுரத்தை சேர்ந்த தாம்சன் இமானுவேல் (24). இவருக்கும் கோவில் பிள்ளை நகரை சேர்ந்த ராஜவேல் என்ற இஸ்ரவேல் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கபில்தேவ் மற்றும் அவரது உறவினர் இமானுவேல் ஆகியோர் நேற்று நள்ளிரவு நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ராஜவேலுக்கும், இவர்களுக்கும் இடையே முன்விரோதம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ராஜவேல் மற்றும் அவரது நண்பர்கள் அடங்கிய 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை அரிவாளால் வெட்ட முயன்றனர்.

அப்போது இமானுவேல் அங்கிருந்து தப்பியோடி விட்டார். ஆனால் கபில்தேவை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இது குறித்து தகவலறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கபில்தேவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கொலை தொடர்பாக இமானுவேலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட கபில்தேல் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News