பழனி அருகே சிகிச்சைக்கு வர மறுத்து கொரோனா பாதித்தவர் தற்கொலை மிரட்டல்
பழனி:
பழனியை அடுத்துள்ள கலையம்புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் வசிக்கும் 40 வயது மின்வாரிய பணியாளர் மகனுக்கு கோவையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது.
இதனையடுத்து அவரையும் அவரது குடும்பத்தையும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இது குறித்து பழனி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த குடும்பத்தினர் கொரோனா பாதிப்பு குறித்து எந்த தகவலையும் தெரிவிக்காமல் அக்கம் பக்கத்தினருடன் நெருக்கமாக பழகி வந்ததுடன் அடிக்கடி வெளியிலும் சுற்றி வந்தனர். இதனைடுத்து பழனி தாலுகா போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் என 10-க்கும் மேற்பட்டோர் அவரது வீட்டிற்கு சென்று தொற்று பாதித்தவரை ஆஸ்பத்திரிக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
ஆனால் அவர் சிகிச்சைக்கு வர மறுத்ததுடன் வீட்டை உள்புறமாக பூட்டிக்கொண்டார். அதிகாரிகள் தொடர்ந்து அவரது வீட்டின் முன்பு காத்திருந்தனர். ஆனால் அவர் என்னை கட்டாயப்படுத்தி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என கழுத்தில் கத்தியை வைத்தவாறு மிரட்டினார். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இன்று காலை அவரது வீட்டிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர். கொரோனா பாதிப்பு குறித்து அவரது வீட்டிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.