செய்திகள்
போலீசார் விசாரணை

வடலூர் அருகே கரும்புத்தோட்டத்தில் மனித எலும்புக்கூடு- போலீசார் விசாரணை

Published On 2020-08-03 07:56 GMT   |   Update On 2020-08-03 07:56 GMT
வடலூர் அருகே கரும்புத்தோட்டத்தில் மனித எலும்புக்கூடுகள் கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடலூர்:

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள ராசாக்குப்பத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சொந்தமான தோட்டத்தை உள்மருவாய் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர், குத்தகைக்கு எடுத்து, அதில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். தற்போது அவை நன்கு வளர்ந்துள்ளதால், அறுவடை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கரும்பு தோட்டத்துக்குள் மனிதனின் மண்டை ஓடும், எலும்புகளும் கிடந்தன. இதை பார்த்த தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி போலீசாருக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் வடலூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கரும்புத்தோட்டத்தில் கிடந்த மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகளை பார்வையிட்டனர். அப்போது எலும்புக்கூடுகள் கிடந்த இடத்தின் அருகில் முதியவர்கள் பயன்படுத்தும் ஊன்றுகோல் ஒன்றும், செருப்பு, கைலி ஆகியவை கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

பின்னர் அந்த எலும்புகளையும், மண்டை ஓட்டையும் போலீசார் கைப்பற்றி, அதை ஆய்வு செய்வதற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அரங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகனின் தந்தை வைத்தியலிங்கம் (வயது 80), அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறுவதும், பிறகு உறவினர்கள் யார் வீட்டிலாவது தங்கிவிட்டு, சிறிது நாட்களில் வீட்டுக்கு திரும்பி வருவதுமாக இருந்து வந்துள்ளார். அவ்வாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், அதன் பிறகு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. குடும்பத்தினரும் வீட்டுக்கு திரும்பி வந்து விடுவார் என்ற எண்ணத்தில் இருந்து வந்துள்ளனர்.

ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர் திரும்பி வரவில்லை. மேலும் போலீசாரால் கைப்பற்றப்பட்டது வைத்தியலிங்கம் பயன்படுத்தும் ஊன்றுகோல் மற்றும் அவர் கடைசியாக அணிந்திருந்த கைலி என்பது தெரியவந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய வைத்தியலிங்கம் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள், போலீசாரிடம் தெரிவித்தனர்.

ஆனால் மருத்துவ பரிசோதனையின் அறிக்கை முடிவு வந்த பிறகே, இறந்தது வைத்தியலிங்கமா? அல்லது வேறு யாராவதா? என தெரியவரும். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரும்புத்தோட்டத்தில் மனித எலும்புக்கூடுகள் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News