செய்திகள்
மாணவர்கள் தேர்வு எழுதும் அறைகளை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.

திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை 35,654 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்

Published On 2020-06-04 03:20 GMT   |   Update On 2020-06-04 03:20 GMT
திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 35,654 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்காக 458 தேர்வு மையங்களை தயார் படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருச்சி:

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு, கொரோனா வைரசை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது அந்த தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில், மாணவர்கள் 17,786, மாணவிகள் 17,868 என மொத்தம் 35,654 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுத உள்ளனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 458 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் ஒரு மையம் மத்திய சிறை வளாகத்தில் உள்ளது.

தேர்வு தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளதால், தேர்விற்கான முன்னேற்பாடுகளை செய்து, தேர்வு மையங்களை தயார் நிலையில் வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு அறைகளை சுத்தம் செய்வது, பெஞ்சு மற்றும் மேஜைகளை சரி செய்தல், கிருமி நாசினி தெளிப்பது போன்ற பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மைய அறைகளை தயார்படுத்தும் பணிகள் நேற்று நடைபெற்றன. இந்த பள்ளி வளாகத்தில் தற்காலிக காய்கறி சந்தை கடந்த 2 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் நலன் கருதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குவதற்கு முன்பாக இந்த தற்காலிக காய்கறி சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பள்ளி நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News