செய்திகள்
விவசாயி கொலை

உளுந்தூர்பேட்டை அருகே சொத்து தகராறில் விவசாயி குத்தி கொலை- 7 பேர் கைது

Published On 2020-06-02 07:01 GMT   |   Update On 2020-06-02 07:01 GMT
உளுந்தூர்பேட்டை அருகே சொத்து தகராறில் விவசாயி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநாவலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் போலீஸ் சரகம் தாமல் காலனி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 55). விவசாயி. இவரது தம்பி முருகன். அதே பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர்களுக்கிடையே சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்தது.

நேற்று மகேந்திரன் தனது உறவினர்கள் ஆமூர் பகுதியை சேர்ந்த அருண், குமார், திவாகர், தனம், சுபாஷ், கஸ்தூரி ஆகியோருடன் சென்று முருகனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதை பார்த்த சுந்தரம் தட்டிக்கேட்டார்.இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த மகேந்திரன் தரப்பினர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரத்தை குத்தினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் சுந்தரத்தை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுந்தரம் பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதி, குருபரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண், சுபாஷ், குமார், மகேந்திரன், கஸ்தூரி, தனம், திவாகரன் ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News