செய்திகள்
மரணம்

இண்டூர் அருகே கொரோனாவுக்கு இளம்பெண் பலி?

Published On 2020-05-28 09:33 GMT   |   Update On 2020-05-28 09:33 GMT
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே இன்று காலை மூச்சு திணறல் காரணமாக இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் காய்கறி வியாபாரிகள் 3 பேர், பெண் போலீஸ் ஒருவர் உள்பட 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதைத்தொடர்ந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து 2 வாலிபர்களுக்கும், சென்னையில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் கிராமத்திற்கு வந்த பானிபூரி வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5-யில் இருந்து 8 ஆக உயர்ந்தது. தற்போது கொரோனாவால் 3 பேரும் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே ஏ.செக்காரப்பட்டியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கு இன்று அதிகாலை திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது.

உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து இண்டூர் போலீசார் மற்றும் மாவட்ட சுகாதாரத் துறையினர் இறந்த இளம்பெண் கொரோனா தொற்று காரணமாக இறந்தாரா? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News