செய்திகள்
திருப்பூர் ரெயில் நிலையம்

திருப்பூரில் இருந்து இன்று ஒடிசா, பீகாருக்கு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கம்

Published On 2020-05-27 10:17 GMT   |   Update On 2020-05-27 10:17 GMT
திருப்பூரில் இருந்து இன்று ஒடிசா, பீகாருக்கு 2 சிறப்பு ரெயில்களில் 3200 பேர் பயணம் செய்கின்றனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகிற வடமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்கிறார்கள்.

அவர்கள் செல்வதற்கு வசதியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலம் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த மாநிலத்திற்கு பயணம் செய்து வருகின்றனர்.

அதன்படி நேற்று ஒரே நாளில் 4800 பேர் பயணம் செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இதுவரை 12 சிறப்பு ரெயில்கள் மூலம் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பீகார், ஒடிசா, உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மேலும் 2 சிறப்பு ரெயில்களில் 3200 பேர் பயணம் செய்கின்றனர். மதியம் 12 மணிக்கு ஒடிசாவிற்கு செல்லும் சிறப்பு ரெயிலில் 1600 வடமாநில தொழிலாளர்களும், மாலை 4 மணிக்கு பீகார் செல்லும் சிறப்பு ரெயிலில் 1600 வடமாநில தொழிலாளர்களும் செல்கின்றனர்.

இதற்காக திருப்பூரின் பல்வேறு பகுதிகளிலிருந்து பஸ்களில் அவர்களை அழைத்து வந்து ரெயில் நிலையம் அருகே உள்ள ஜெய்வாபாய் அரசு பள்ளியில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

ரெயிலில் பயணம் செய்யும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உணவு, தண்ணீர் பாட்டில் போன்றவை வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News