செய்திகள்
கைது

மணப்பாறை அருகே சிறுமி கொலை- பள்ளி மாணவன் கைது

Published On 2020-05-25 13:37 GMT   |   Update On 2020-05-25 13:37 GMT
திருச்சி மணப்பாறை அருகே 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் பள்ளி மாணவனை கைது செய்தனர்.
மணப்பாறை:

திருச்சி மாவட்டம், கிருஷ்ண சமுத்திரம் மேல் பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகள் கிருத்திகா (வயது 9). வீ.பூசாரிபட்டி அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள ஒரு மல்லிகை பூ தோட்டத்தில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிருத்திகா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை அந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் பார்த்து அக்கம் பக்கத்தினரிடம் கூறியதையடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சிறுமியை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் கரை படிந்து கிடந்த உடையின் அருகே சென்று நின்றது. அந்த உடை யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தியபோது சிறுமியை முதலில் பார்த்த சிறுவன் உடை என்பது தெரியவந்தது. அந்த சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் தலையில் கல்லால் தாக்கியுள்ளது தெரியவந்தது. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா இன்று காலை இறந்தார். அவரை கல்லால் தாக்கி கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் 9 வயது சிறுமியை கொலை செய்ததாக பள்ளி சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலியல் தொல்லை தந்தபோது சத்தம்போட்டதால் சிறுமியை கல்லால் தாக்கி மாணவன் கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News