செய்திகள்
மதுரை மத்திய சிறையில் நெரிசலை தவிர்க்க 16 பேருக்கு ஜாமீன்
மதுரை மத்திய சிறையில் நெரிசலை தவிர்க்க சிறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது.
மதுரை:
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீதித்துறையும், சமூக விலகலை முழுமையாக கடைபிடிக்க நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை நிர்வாகத்தை வலியுறுத்தியது. அதன் ஒரு பகுதியாக மதுரை மத்திய சிறையில் நெரிசலை தவிர்க்க சிறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மதுவிலக்கு சட்டம், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட சிறு வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலை தயாரித்து அளிக்கும்படி மதுரை மத்திய சிறை அதிகாரிகளிடம் கேட்கப்பட்டது. இதையடுத்து சிறு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள 18 கைதிகளின் பட்டியல் மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதில் 16 பேருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.