செய்திகள்
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகளாக மாற வேண்டும்- பூமி தினத்தன்று சத்குரு வலியுறுத்தல்
பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் அரசியல் பிரச்சினைகளாக மாற வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியுள்ளார்.
கோவை:
சர்வதேச பூமி தினம் (ஏப்ரல் 22) நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அமைப்பான ‘இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பின் (International Union for Conservation of Nature (IUCN)’ இந்திய உறுப்பினர்கள், கோவிட் 19 பிரச்சினைக்கு பிந்தைய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆன்லைனில் கலந்துரையாடினர்.
இவ்வமைப்பில் உறுப்பினராக அங்கம் வகிக்கும் ஈஷா அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் பிரிவான ஈஷா அவுட்ரீச் அமைப்பும் இக்கூட்டத்தில் பங்கேற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ விடுத்த செய்தியில், “இந்த பூமியில் உள்ள உயிர்களுக்கு உங்களுடைய வெற்றி மிகவும் முக்கியமானது. பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உலகெங்கும் உள்ள அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் அரசியல் பிரச்சினைகளாக மாற வேண்டும். மிகப்பெரிய அளவில், கொள்கை ரீதியான மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.
சுவிட்சர்லாந்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட சத்குரு ‘கான்சியஸ் பிளானட்’ என்ற புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்தினார்.
அவ்வியக்கம் தொடர்பான ஒரு வீடியோவில், “உலகம் முழுவதும் சுமார் 3 பில்லியன் மக்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்காக தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தினால், சுற்றுச்சூழல் சவால்களை தீர்வு காணும் பாதையில் இந்த உலகம் பயணிக்க தொடங்கும்” என்று சத்குரு பேசியுள்ளார்.
சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண உலக நாடுகளின் தேர்தல் அறிக்கைகளில் அவை இடம்பெற வேண்டும் என்று சத்குரு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.