செய்திகள்
வண்டலூர் பூங்கா

வண்டலூர் பூங்காவில் விலங்குகள் கண்காணிப்பு தீவிரம்

Published On 2020-04-07 09:58 GMT   |   Update On 2020-04-07 09:58 GMT
மத்திய உயிரியல் பூங்காக்கள் ஆணையம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வண்டலூர் பூங்காவில் விலங்குகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் முதன்முறையாக புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய உயிரியல் பூங்காக்கள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபற்றி மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உயிரியல் பூங்காக்கள் ஆணைய செயலாளர் எஸ்.பி.யாதவ் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதைத்தொடர்ந்து வண்டலூர் பூங்காவில் விலங்குகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கை தொடர்ந்து கடந்த மாதம் முதல் வண்டலூர் பூங்கா மூடப்பட்டுள்ளது. இங்கு சிங்கம், புலி மற்றும் பறவைகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

வங்க புலிகள், வெள்ளை புலிகள் என மொத்தம் 27 புலிகள் உள்ளன. அவற்றை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விலங்குகளை பராமரிப்பவர்களுக்கு ஏற்கனவே நோய் தொற்று ஏதேனும் உள்ளதா? என்று பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதேபோல் விலங்குகளின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதனை பராமரிப்பாளர்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

பூங்கா முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பணிக்கு வரும் ஊழியர்கள் அனைவருக்கும் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News