செய்திகள்
கோப்பு படம்

மதுரையில் 150 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு ஆய்வகம் செயல்படத் தொடங்கியது

Published On 2020-03-26 07:52 GMT   |   Update On 2020-03-26 07:52 GMT
மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 150 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு ஆய்வகம் செயல்படத் தொடங்கியது.
மதுரை:

கொரோனா எனும் கொடிய வைரஸ் கொத்து கொத்தாக மக்களின் உயிரை குடித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் அதிரடி நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விழித்திரு-விலகியிரு - வீட்டிலிரு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 8 படுக்கைகள் போடப்பட்டுள்ளன. 40-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் கோரோனா நோயால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்காக கட்டப்பட்ட புதிய விடுதியானது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு வார்டாக மாற்றப்பட்டுள்ளது.

இங்கு 150 படுக்கைகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் தனித்தனியாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் மின் விசிறிகள் என அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா நோயை கண்டுபிடிப்பதற்கான ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவக்கல்லூரி டீன் சங்குமணி கூறும்போது மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் திறக்கப்பட்டுள்ள கொரோனா நோய் ஆய்வகத்தில் நாள்தோறும் 50 முதல் 90 பேரின் ரத்த மாதிரிகளை பிசோதனை செய்ய முடியும். தற்போது 300 பேருக்கு பரிசோதனை செய்யும் அளவுக்கு உபகரணங்கள் உள்ளன என்றார்.
Tags:    

Similar News