செய்திகள்
கிருஷ்ணசாமி

குடியுரிமை சட்டம் குறித்து தவறாக பிரசாரம் செய்கின்றனர்- கிருஷ்ணசாமி

Published On 2020-02-28 06:17 GMT   |   Update On 2020-02-28 06:17 GMT
சில அரசியல் கட்சிகள் 15 சதவீத வாக்குக்காக குடியுரிமை சட்டம் குறித்து தவறாக பிரசாரம் செய்வதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி:

திருச்சியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விளக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

குடியுரிமை சட்டம் குறிப்பிட்ட மதத்துக்கு எதிரானது என்று ஓட்டு வங்கி அரசியல் செய்யும் சில கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். 1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தாலும் நாட்டின் எல்லை வரையறுக்கப்படவில்லை. மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு தான் நாட்டின் எல்லை வரையறை செய்யப்பட்டது.

அரசியலமைப்பு சட்டம் சொல்லாத எதையும் பிரதமர் மோடி செய்யவில்லை. காஷ்மீர் மாநிலத்திற்கு பிற மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம்களே போக முடியாத நிலை இருந்தது. இப்போது அந்த நிலை மாறியுள்ளதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

குடியுரிமை சட்டத்தால் நேரிடும் பாதிப்பு என்ன என்று தமிழ்நாடு முதல்வர் கே.பழனிசாமி கேட்டதற்கு ஒரு எதிர்க்கட்சியும் பதில் கூறவில்லை. நாம் சாதி உணர்வை விட்டு விட்டு இந்தியர்களாக ஒன்றிணைய வேண்டும்.

மனச்சாட்சி இல்லாத சில அரசியல் கட்சிகள் 15 சதவீத வாக்குக்காக குடியுரிமை சட்டம் குறித்து தவறாக பிரசாரம் செய்கின்றன. அந்த தவறான பிரசாரத்திற்கு முஸ்லிம்கள் இரையாகி விடக்கூடாது. எனவே முஸ்லிம்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
Tags:    

Similar News