செய்திகள்
கைதான 5 பேர்

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 5 பேர் கைது

Published On 2020-02-27 08:35 GMT   |   Update On 2020-02-27 08:35 GMT
இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 5 பேரை மடக்கிப்பிடித்த உளவுத்துறை போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம்:

இந்திய கடலோர காவல் படையினர் இந்திய-இலங்கையில் கடல் பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது இலங்கையில் இருந்து தனுஷ்கோடி நோக்கி மின்னல் வேகத்தில் பிளாஸ்டிக் படகு வந்தது. அந்த படகில் 5 பேர் இருந்தனர்.

படகை நிறுத்துமாறு ரோந்து படகினர் சைகை காட்டினர். ஆனால் படகு நிற்காமல் வந்து கொண்டிருந்தது. ரோந்து படையினர் அந்த படகை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அந்த படகில் இருந்த 5 பேரை கைது செய்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 5 பேரும் தனுஷ்கோடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு மத்திய, மாநில உளவுத்துறை போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (28), ஏசு ராஜா (46), உதயகுமார் (40), ரவீந்திரன் (29), ரெக்சன் (22) என்பது தெரியவந்தது.

இந்திய கடல் எல்லைக்குள் அவர்கள் அத்துமீறி நுழைந்தது ஏன்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.


Tags:    

Similar News