செய்திகள்
கோப்பு படம்

கர்ப்பிணி மகள் மீது ஆசிட் வீச்சு - தலைமறைவாக இருந்த தந்தை கைது

Published On 2020-02-05 07:06 GMT   |   Update On 2020-02-05 07:06 GMT
திருவள்ளூர் அருகே காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மகள் மீது ஆசிட் வீசிய தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலகுமார். விருப்ப ஓய்வு பெற்ற தலைமை காவலர். இவரது மகள் தீபிகா. இவர் வீட்டருகே வசித்த சாய்குமார் என்பவரை காதலித்தார்.

இதற்கு பாலகுமார் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் குடும்பத்துடன் திருத்தணியில் குடியேறினார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் தீபிகா வீட்டை விட்டு வெளியேறி சாய்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து தீபிகாவும், சாய்குமாரும் வேப்பம்பட்டில் வசித்து வந்தனர். தற்போது தீபிகா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் பாலகுமார் கடந்த 31-ந்தேதி மகளை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது மகள் தீபிகாவிடம் வீட்டிற்கு வருமாறு அழைத்தார். இதற்கு தீபிகா எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாலகுமாரும் அவருடன் வந்த 4 பேரும் பவுடர் கலந்த ஆசிட்டை தீபிகாவின் முகத்தில் வீசினர். மேலும் இதனை தடுக்க முயன்ற மாமியார் பாக்கியலட்சுமி, அவரது மருமகள் திவ்யா ஆகியோர் மீது வீசிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட தீபிகா உள்பட 3 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வந்தனர். தலைமறைவான பாலகுமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் வேப்பம்பட்டு பகுதியில் பதுங்கி இருந்த பாலகுமாரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News