செய்திகள்
ராணிப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு கொள்ளை
ராணிப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு ரூ.1 லட்சம் மது பாட்டில்களை திருடி சென்று விட்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அருகே உள்ள செட்டி தாங்கலில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து பூட்டி சென்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் துளைபோட்டு அதன்வழியாக கடைக்குள் புகுந்தனர்.
அங்கிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்று விட்டனர். இன்று காலை டாஸ்மாக் கடையில் பின்பக்க சுவரில் துளை இருப்பதைக் கண்ட பொது மக்கள் இதுபற்றி டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
சம்பவத்தில் 2-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.