செய்திகள்
உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழில் குடமுழுக்கு நடத்த கோரி வழக்கு: 27-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

Published On 2020-01-22 08:04 GMT   |   Update On 2020-01-22 08:04 GMT
தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நிகழ்வை தமிழில் நடத்தக் கோருவது தொடர்பான வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை:

தஞ்சை பெரிய கோவிலில் பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் 21 உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கை தமிழிலில் நடத்த உத்தரவிடக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலில் தேவாரம், திருவாசகம் பாடி தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவுக்கு வரும் 27-ம் தேதி பதில் அளிக்கும்படி இந்து சமய இந்து சமய அறநிலையத் துறை  ஆணையர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையையும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

தஞ்சை பெரிய கோவிலில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை தமிழில் திருமுறை பாராயணம் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இதேபோல் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையும் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News