செய்திகள்
கோப்பு படம்

சங்கரன்கோவில் அருகே குளத்தில் மூழ்கி தாய்-மகள் உள்பட 3 பெண்கள் பலி

Published On 2020-01-05 10:57 GMT   |   Update On 2020-01-05 10:57 GMT
சங்கரன்கோவில் அருகே குளத்திற்கு குளிக்க சென்றவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனையூர் பகுதியை சேர்ந்தவர் அழகு பொன்னையா. மினிவேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்திரா (வயது 33). இவர்களது மகள் சுமித்ரா(13). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் இந்திராவும், அவரது மகள் சுமித்ராவும் பனையூர் பகுதியில் உள்ள பெரியகுளத்தில் குளிப்பதற்காக சென்றனர். இவர்களுடன் உறவினரான முருகானந்தம் மனைவி செல்வியும் குளிக்க சென்றார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தற்போது பெரியகுளம் முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. இன்று காலை குளத்தில் 3 பேரும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது சிறுமி சுமித்ரா எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றார். உடனடியாக சத்தமிட்டு காப்பாற்றும்படி தனது தாயை உதவிக்கு அழைத்தார். மகள் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சியடைந்த இந்திரா மற்றும் அவரது உறவினர் செல்வி ஆகியோர், சுமித்ராவை மீட்க சென்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக இவர்களும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.

உயிருக்கு போராடியபடி அவர்கள் 3 பேரும் கூச்சலிட்டனர். இதை பார்த்த அந்த வழியாக சென்ற கிராமமக்கள் குளத்தில் இறங்கி அவர்களை மீட்க சென்றனர். எனினும் அதற்குள் 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் 3 பேர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன் கோவில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News